“உலகமே ஒரு சிறைச்சாலை மெய்மைதனக்கு இங்கே பொய்மையே சிறைச்சாலை”
உலகில் வாழத்தகுந்த நாடுகளின் பட்டியலில் முதலிடத்தி லுள்ள நாட்டிலும், முதலாளித்துவ மற்றும் சோசலிச நாடு களிலும்கூட சிறைகள் உண்டு.ஒரு நாட்டின் சமூகச்சீர்கேடு மற்றும் நிர்வாகச் சீர்கேடுகளை புலப்படுத்துபவற்றுள் ஒன்றாக சிறைகளும் குற்றங்களும் உள்ளன. எண்ணெய் ஏற்றுமதியில் உலகில் இரண்டாமிடத்தி லுள்ள, மதக்கோட்பாட்டுச் சர்வாதிகாரத்தால் ஆளப்படும் ஈரானில், பொரு ளாதார ஏற்றத்தாழ்வு, ஊழல், சமூகச் சீர்கேடுகள் ஆகியவற்றின் சான்றாக விளங்கும் ஒரு சிறைச்சாலையை கதைக்களமாகக் கொண்டு பூடக அழகியலில் வெளிவந்துள்ள திரைப்படம் தான் “A Hero”. ரஹீம் திருமணமாகி பிரிந்தவன். அந்தத் தம்பதிக்கு ஒரேமகன் ஷிவாஷ்.திக்கி திக்கி பேசுபவன். மணவிலக்கான மனைவியின் அண்ணன் பக்ராமிடம் பட்ட கடனை தீர்க்க இயலாது, நொடித்த கடனாளியாகி சிறைத்தண்டனை பெறுகிறான். ரஹீமின் சகோதரி மாலி. இவளின் கணவன் ஹூசேன், புராதனக் கல்லறையை (Tomb of Xerxes) சீரமைக்கும் வேலை பார்ப்பவன். இவர்களின் பராமரிப்பில் ஷிவாஸ் உள்ளான். ரஹீமின் தற்போதைய காதலி பர்ஃகொண்டே; இவளும் சிறையிலிருந்தவள். ரஹீம், சிறைச் சுவர்களில் ஓவியம் வரைவதால், சிறைகாப்பாளர்கள் ஷெலபர், டெஹ்ரி ஆகியோரிடம் நெருக்கமானவனாகிறான். சிறையிலிருந்து பரோலில் வரும் ரஹீம், கடனை தீர்க்க, ஹூசேன், மாலியிடம் வெற்று காசோலை கேட்கிறான்.அவர்கள் தரவில்லை. பின் காதலி பர்ஃகொண்டேயைச் சந்திக்க, அவளால் கண்டெடுக்கப்பட்ட பதினேழு தங்க காசுகள் கொண்ட பையை ரகசியமாகத் தருகிறாள். கடனுக்காக இதனை விற்க முயற்சிக்கையில், தங்கத்தின் மதிப்பு வீழ்ச்சி காரணமாக உடனே விற்க இயலவில்லை. எனவே அவற்றை சகோதரி மாலியிடம் கொடுத்து வைக்கிறான். தன் கடனை அடைக்க வேண்டி, நண்பர்கள் இத்தங்கக் காசுகளை கொடுத்துதவியதாகப் பொய் சொல்கிறான். பின் ஹூசேன் துணையுடன், பக்ராமிடம் கடனைத்தீர்க்க நடத்திய பேச்சு வார்த்தையும் தோல்வியடைகிறது. அடுத்து பர்ஃகொண்டே, ரஹீமிடம் கைபையை அதன் உடமையாளரை தேடிக் கண்டுபிடித்து ஒப்படைக்கச் சொல்கிறாள்.
ரஹீம், தங்கத்துடன் கைப்பையொன்று பேருந்து நிறுத்தத்தில் கண்டெடுக்கப் பட்டதாகவும்; சம்பந்தப்பட்டவர்கள் விபரங்களைத் தெரிவித்து பெற்றுக் கொள்ளச் சொல்லி நகரெங்கும் சுவரொட்டி விளம்பரம் செய்கிறான்.தொடர்புக்கு சிறைக்காப்பாளினியின் கைபேசி எண்ணைக் கொடுக்கிறான்.பரோல் முடிந்து சிறைக்கு போகிறான். சிறையில், மாலியின் கைபேசி எண்ணெய் காப்பாளர் டெஹ்ரி கேட்டு பெறுகிறான். இதற்குபின், முகமறியாப் பெண்ணொருத்தி, டாக்சி ஓட்டுநருடன் வந்து, சரியான விபரத்தைக்கூறி, மாலி, ஷிவாஸிடம் தங்கக்காசுகளுள்ள பையை பெற்றுச் செல்கிறாள். அப்போது மாலியிடம் கனிவாகப் பேசியதை நம்பி, இவளது வீட்டு விலாசத்தை கேட்காமல் விட்டுவிடுகிறாள். ரஹீமின் நேர்மையைப் பாராட்டி, சிறை நிர்வாகம் தொலைக்காட்சிப் பேட்டிக்கு ஏற்பாடு செய்கிறது. பேட்டிக்கு முன் ரஹீம், காப்பாளர் டெஹ்ரியிடம், தங்கக்காசுள்ள பையை தான் கண்டெடுக்கவில்லையென்றும், தனது காதலி தான் கண்டெடுத்ததாக உண்மையைக் கூறுகிறான்.அதற்கு டெஹ்ரி, யாரெடுத்தால் என்ன! தங்கம் உரியவரிடம் சேர்ந்ததே போதும் என, மறைமுகமாக ரஹீமே எடுத்ததாக சொல்லச் சொல்கிறான். அதன்படி பேட்டியில் தானே எடுத்ததாகச் சொல்கிறான். பேட்டியில், சிறைக்காப்பாளர்கள் ரஹீமை புகழ்கிறார்கள்; ரஹீம் பிரபலமடைகிறான். சிறைத்துறை சிறப்பு விடுப்பு அளிக்கிறது. நகரக் கவுன்சில் வேலை கொடுக்கிறது. மரணதண்டனை கைதிகளின் குடும்பத்திற்கு நிதி திரட்டி உதவும் சாரிட்டி ஒன்று, ரஹீமை பாராட்டி சான்று வழங்கி, அவனது கடனுக்காக நிதி திரட்டுகிறது. இக்கூட்டத்தில் பக்ராம், “ரஹீம் ஒரு பித்தலாட்டக்காரன்” எனக்கூறி வம்பு இழுக்கிறான். அப்போது டெஹ்ரி, ரஹீமிற்கு ஆதரவாகப் பேசுகிறான். மனிதவள அலுவலரின் விசாரணைக்கு பின்பே, நகரக்கவுன்சில் வேலையில் பணியேற்க முடியும். அதனால் ரஹீம் இவ்விசாரணைக்கு ஆஜராகிறான். விசாரணை அதிகாரி, கைதியின் தற்கொலையால் சிறைக்கு ஏற்பட்ட அவப்பெயரை போக்க, சிறையே ஏற்பாடு செய்த நாடகமென வலைதளத்தில் வந்துள்ள செய்திகளைப்பற்றியும்; தங்கம் கிடைப்பதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு பக்ராமிற்கு சிறையிலிருந்து எழுபதாயிரம் தொமன் தருவதாக உரை குறுஞ்செய்தி அனுப்பியது யாரெனவும்; கேட்கிறார். பதிலளிக்கத் திணறுகிறான். பின் தங்கம் பெற்ற பெண்ணோடு மறு விசாரணைக்கு வரச்சொல்கிறார்.
முகமறியா பெண்ணின் விலாசம் தெரியாததால், அவள் பேசிய எண்ணை வைத்து தேடுகையில் அவள் பயன்படுத்திய எண், டாக்சி ஓட்டுநருடையது என்பதும், அவனும் சிறையில் இருந்தவன் என்பதும் தெரிகிறது. ஓட்டுநருடன், ரஹீம், ஷிவாஸ் ஊர் முழுதும் தேடியும், அவள் கிடைக்கவில்லை. எனவே அவளுக்குப் பதிலாக பர்ஃகொண்டேயை ஆள்மாறாட்டம் செய்கிறார்கள்.ஆனால் விசாரணை அதிகாரிக்கு பர்ஃகொண்டே மீது ஐயம் ஏற்படுகிறது. பக்ராம்தான் விசாரணை அதிகாரியிடம் வத்தி வைத்திருப்பான் என்று நினைத்து ரஹீம் காதலியுடன் சென்று, அவனை நையப்புடைக்கிறான். இதை, பக்ராம் மகள் வீடியோ எடுத்து, “ரஹீம் பற்றிய உண்மையை என் அப்பா கூறியதால், அவரை அடிக்கிறான்; இவனுடன் வந்தவள் இவனது காதலி” எனக்கூறி சமூக ஊடகங்களில் பதிவிடுகிறாள். இதன் விளைவாக ரஹீமிற்கு, நகரக் கவுன்சில் வழங்கிய பணி ஆணை ரத்து செய்யப்படுகிறது; சாரிட்டி ரஹீமுக்குத் திரட்டியநிதி மறுக்கப்பட்டு தூக்குத்தண்டனைக் கைதியின் மனைவிக்குக் கொடுக்க முடிவெடுக்கிறது. இதையறிந்த பஃர்கொண்டே, சாரிட்டி தலைவியைச் சந்தித்து,ரஹீம் சொன்னது பொய்கள்தான். ஆனால் அவன் நல்லவன் என்றும், வசூலித்த பணத்தை தூக்குத்தண்டனைக் கைதியிடம் அவனே தரச் சொன்னதாகச் சொன்னால் அது இரு தரப்பையும் பெருமைப்படுத்தும் என்று கூற, தலைவியும் உடன்படுகிறாள்; மீடியாவிடம் இதேபோல் கூறுகிறாள். இந்த காணொலியும் பரவுகிறது. இது ரஹீமின் இழந்த பெருமையை ஒரளவுக்கு மீட்கிறது. ரஹீமைச் சந்திக்கும் டெஹ்ரி சிறையின் பெயரைக் காப்பாற்ற “என்தந்தை குற்றமற்றவர்” என்று ரஹீமின் மகனைப் பேசவைத்து ஒரு காணொலி வெளியிட ரஹீமைச் சம்மதிக்கச் செய்கிறார். கெஞ்சும் குரலில் தன் மகன் திக்கித் திக்கிப் பேசுவதைக் காணச் சகிக்காத ரஹீம், அப்படி அவனை வேதனைப்படுத்தி நற்பெயர் எடுக்க விரும்பவில்லை என்று கூறி, டெக்ரியிடம் எடுத்த வீடியோவை அழிக்கச் சொல்கிறான்.அவன் மறுக்கிறான். தள்ளுமுள்ளு நடக்கிறது. டெஹ்ரி, இறுதியில் வீடியோவை அழித்து விட்டு, நீ இருக்க வேண்டிய இடம் சிறை தான் எனச்சொல்லி, கோபமாகச் செல்கிறான்.
இறுதியில் பர்ஃகொண்டே வசம்,ஷிவாஸை ஒப்படைக்கிறான். தாடி மழித்து, மொட்டையடித்து புது ரஹீமாக தன்னை வஞ்சித்த, அந்தகாரச் சிறைக்குள் கனத்த இதயத்துடன் நுழைகிறான். இக்கணத்தில் பியானோ, வயலின் கூட்டிசை பின்னணியில் ஒலிக்க, கேட்போரின் நெஞ்சம் பதைக்க, படமும் நிறைவு பெறுகிறது. சிறை நிர்வாகத்தின் முறைகேடுகள், ஊழல் ஆகியவற்றை மூடிமறைத்து பொதுவெளியில் நல்லெண்ணத்தைத் தோற்றுவிக்கும் சிறை அதிகாரிகளின் ஏற்பாட்டில், ரஹீம் ஒரு பலியாடு. அடையாளம் தெரியாத பெண், டாக்சி ஓட்டுநர், தூக்குத் தண்டனைக் கைதியின் மனைவி மற்றும் சாரிட்டி நிறுவனத்தின் தலைவி பொய்சொல்ல ஒப்புக்கொள்வது ஆகியன எல்லாம் சிறை அதிகாரிகளின் சதிச்செயல்களே, என்பது பூடகமாக உணர்த்தப்பட்டுள்ளது. சதிச்செயல்கள் புரியும் சிறைத்துறையே வில்லன்;ரஹீம், மனசாட்சியுடன் போராடும் ஹீரோ. ரஹீம், மனமுடைந்து காரில் செல்லும்போது பார்க்கின்ற வெறும் மணலிலான மலைக்குன்றுகள் அவனது மன வெறுமையின் குறியீடு. ரஹீம் புராதன கல்லறை வாசலில் வெளியேறும் முன் அமர்ந்திருக்கின்ற முதல் காட்சியும்; சிறைக்குள் செல்லும்முன், சிறை வாசலில் அமர்ந்திருக்கும் இறுதிக் காட்சியும்; சிறை, கல்லறை ஆகியவற்றை மனச்சிறையின் குறியீடுகளாகவே கையாளப்பட்டுள்ளது. இதேபோல் ஷிவாஸ், ரஹீமின் மனசாட்சியாகவே படம் முழுதும் வருகிறான். கடும் திரைப்படத் தணிக்கை முறையுள்ள ஈரானில் இந்தத் திரைப்படமும் பூடகமொழியையே ஊடகமொழியாகக் கொண்டு ஆட்சியாளர்களைப் பகடி செய்கிறது. சகல அச்சுறுத்தல்களையும் மீறி வெளிப்படும் ஆன்மாவின் தார்மீக வேட்கையை, மனித மாண்பை, ரஹீமின் பாத்திரப்படைப்பில் அடிக்கோடிட்டுக் காட்டி இயக்குநர் அஷ்கர் ஃபர்கோடி அற்புதமான கலைஞனாக உயர்ந்து நிற்கிறார். ஈரானிய வெற்றி படங்களான “தி ஷெப்பரேசன்”,”தி ஷேல்ஸ்மேன்” போன்ற படங்களை இயக்கியவரும் இவரே. அமீர்ஜாடிடீ என்ற நடிகர்,ரஹீமாகவே வாழ்ந்துள்ளார்.